search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தலை சந்திக்க தயாரா"

    நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அதனுடன் மிசோராம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்த மோடி தயாரா என காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. #AshokGehlot #Modi
    புதுடெல்லி:

    மத்திய சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா எழுதிய கடிதத்தில் 12 மாநில சட்டசபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் 2019-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் மிசோராம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவதற்குள் அரசியலமைப்பு சட்டத்தின்படி அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும்.



    பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த விரும்பினால் ஒரேயொரு வழிதான் உள்ளது. அதற்கு முதலில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அதனுடன் மிசோராம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்திக் கொள்ளட்டும். அதற்கு மோடி தயாரா?... அப்படிச் செய்தால் அதை காங்கிரஸ் வரவேற்கும். இது போன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.

    மேற்கண்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்றால் அதற்கு சட்டத் திருத்தம் செய்யவேண்டியது அவசியமாகும். இந்த திருத்ததை மேற்கொள்ளாமல் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை நடத்துவதும் இயலாத காரியம். அதேநேரம் இந்த மாநிலங்களில் தேர்தலை தள்ளி வைத்தால் அதை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot #Modi  #SimultaneousElections
    ×